பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ 1.70 கோடியை தாண்டியது
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் மட்டுமன்றி கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள்
பழனிக்கோயில் உண்டியல்கள் கடந்த 28 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.1.70 கோடியை தாண்டியது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் மட்டுமன்றி கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் என ஏராளமானோர் வந்து சென்றதால் கடந்த 28 நாட்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்தன. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூ.ஒரு கோடியே 70 இலட்சத்து 70 ஆயிரத்து 870 கிடைத்தது. பணம் தவிர ஏராளமான பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பாய்மரப்படகு, பூரணகும்பம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமாக காணிக்கை செலுத்தியிருந்தனர்.
தங்கம் 630 கிராமும், வெள்ளி 7 ஆயிரத்து 790 கிராமும் வரப்பெற்றிருந்தது. இவை தவிர மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய யூரோ, ஜப்பான், குவைத் என பல்வேறு நாட்டு நாணயங்களும், டாலர் நோட்டுக்களும் உண்டியலில் கிடைத்தன. மொத்தம் 165 வெளிநாட்டு கரன்சிகள் வரப்பெற்றது. பல பக்தர்கள் ரிஸ்ட் வாட்ச், நவதானியங்கள், பட்டுச்சேலைகள், பித்தளை பாத்திரங்கள், செல்போன் ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.