வடக்குமாங்குடியில் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் விசாரணை
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் டி.வெங்கடேசன் வியாழக்கிழமை
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் டி.வெங்கடேசன் வியாழக்கிழமை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே முன்விரோதத்தில் கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு 7 மணிக்கு மேல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் வடக்குமாங்குடி காலனியைச் சேர்ந்த ராணி (45), பெத்தான் (70), நாகூரான் (60), குருநாதன்(56), பழனி (80), பாப்பா (65) ஆகிய 6 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் குமார் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில் 35 பேரை கைது செய்தனர். ஆனால் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கலவரத்தில் காயமுற்ற பழனி (80) பாப்பா (65) ஆகிய இருவர் சமீபத்தில் இறந்தனர்.
இந்நிலையில் சென்னை தேசிய ஆதிதிராவிட நல ஆணைய இயக்குநர் டி.வெங்கடேசன் வடக்குமாங்குடி கிராமத்திற்கு வியாழக்கிழமை சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். வடக்குமாங்கு காலனி பகுதியில் வீடு, வீடாக சென்று அம்மக்களிடம் கலவரம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது காலனி மக்கள் தங்கள் மீது டியூப்லைட், உருட்டு கட்டை மற்றும் ஆயதங்களால் தாக்கியது குறித்து தெரிவித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர். ஆணையருடன் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரிவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம், காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.