ஸ்ரீவைகுண்டம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை. 5பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் 5பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் 5பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரையைச் சேர்ந்த விவசாயி பெருமாள் மகன் குமார் (20). பொறியியல் பட்டதாரியான இவர் வெள்ளிக்கிழமை இரவு அவரது பைக்கில் பேட்மாநகரம் சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பினாராம். பேட்மாநகரத்தை கடந்து சில தூரம் வந்த நிலையில் 5பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது வலது கை துண்டானது. மேலும் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. இதில் நிலை குழைந்த குமார் சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், ஆய்வாளர்கள் பிரான்சிஸ் ராஜசுந்தரம் மற்றும் போலீஸார் விரைந்து குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனை அனுப்ப வந்தனர். அப்போது குமாரின் உறவினர் கள் திரண்டு வந்து குற்றவாளிகளை கைது செய்யாமல் சடலத்தை எடுக்க கூடாது என மறியலில் ஈடுப்பட்டனர். உடன் டிஎஸ்பி ராஜமன்னார் தலைமையிலான போலீஸார் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சடலமானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
Advertisement
கொலையாளிகள் யாரென தெரியவில்லை. போலீஸார் விசாரணையில் ஸ்ரீமூலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் அதன் அருகில் உள்ள பேரூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு பிரச்னை உள்ளது. மேலும் அடிக்கடி மோதல் உண்டானதில் இரு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் உள்ளதாம்.
இதில் தொடர்புடையவர்கள் குமாரை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் பல கோணங்களில் விசாரணையை தொடங்கி தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இரு கிராமத்திலும் பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி துரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.