ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர்.
பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர்.
பழனியை அடுத்தது காவலப்பட்டி ஊராட்சி. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த சின்னநாச்சிமுத்து என்பவரும், துணைத் தலைவராக ரமாதேவி ராஜன் என்பவரும் உள்ளனர். இந்த ஊராட்சியின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தில் ஒன்பது கவுன்சிலர்கள் உள்ள நிலையில் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் தங்கராஜ், கோபாலகிருஷ்ணன், காளீஸ்வரி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, காவலப்பட்டி ஊராட்சி தலைவராக சின்னநாச்சி முத்து உள்ள நிலையில் அவரது மகனே அனைத்து பணிகளையும் பார்க்கிறார். அதே போல துணைத் தலைவராக ரமாதேவி இருந்தாலும் அவரது கணவரே கூட்டத்துக்கு வருகிறார். மரபுகளை யாரும் பின்பற்றுவதில்லை. காவலப்பட்டியில் தெருவிளக்குகள் கடந்த மூன்று மாதங்களாக எரிவதில்லை. ஆனால், தெருவிளக்கு பராமரிப்பு என கணக்கு எழுதி பணம் பெறுகின்றனர்.
குடிநீர் மிகவும் அசுத்தமாக உள்ளது. சாக்கடைக்குள்ளேயே தண்ணீர் குழாயை அமைத்துள்ளனர். ஆகவே, கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து பூர்வமாக மனு கொடுக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.