நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணா
பழனி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் ஏராளமான வார்டுகளில் தெருவிளக்குகள் குறித்து தொடர்ந்து புகார்கள் மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. நகராட்சி தெருவிளக்குகள் பராமரிப்புக்கு டெண்டர்
பழனியில் தெருவிளக்குகள் எரியாதது குறித்து வழங்கிய புகாரை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் ஏராளமான வார்டுகளில் தெருவிளக்குகள் குறித்து தொடர்ந்து புகார்கள் மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. நகராட்சி தெருவிளக்குகள் பராமரிப்புக்கு டெண்டர் எடுக்க சரியான நபர்கள் வரவில்லை, இருக்கும் நபர்கள் போதவில்லை என மன்ற தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் பதில் கொடுத்து வந்த நிலையில் தெருவிளக்குகள் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 25 வார்டில் பிரதான சாலையாக ரெட்கிராஸ் ரோடு உள்ளிட்ட பல சாலைகளிலும், ஜனநடமாட்டம் அதிகமுள்ள தெருக்கள், மருத்துவமனை உள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் கடந்த பல வாரங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து 25வார்டு கவுன்சிலர் கந்தசாமி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கவுன்சிலர் கந்தசாமி திங்கள்கிழமை நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் கண்டு கொள்ளாமல் சென்றது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. போராட்டம் குறித்து கந்தசாமி கூறுகையில், வார்டுகளில் தெருவிளக்குகள் எரியாவிட்டால் பொதுமக்கள் அதிகாரிகளை கேட்பதில்லை. மக்கள் பிரதிநிதியான எங்களைத்தான் கேட்கின்றனர். பல பகுதிகளில் தொடர்திருட்டு நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் சாலைகளில் உள்ள மேடு, பள்ளத்தில் பொதுமக்கள் விழுந்து செல்கின்றனர்.அதிகாரிகளிடம் கேட்டால் தற்போதைக்கு முடியாது என்று பதிலளிக்கின்றனர் என தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரது வார்டில் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறி தர்ணாவை கைவிட செய்தனர்.