பழனியில் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
பழனி அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே புது ஆயக்குடியை சேர்ந்தவர் ஜாபர்சாதிக்(52). இவர் பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். சப்பளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் தொப்பம்பட்டியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை அவ்வப்போது செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தொப்பம்பட்டி ஊராட்சியில் ஒப்பந்த பணிக்காக செலுத்திய ஏல முன்வைப்புத் தொகை ரூபாய் 45 ஆயிரத்தை திரும்ப வழங்குமாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாபர்சாதிக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜாபர் சாதிக் பத்து சதவீதமான ரூபாய் நான்காயிரத்து ஐநூறை லஞ்சமாக வழங்கினால் மட்டுமே காசோலை வழங்க முடியும் என காலதாமதம் செய்துள்ளார். இதையடுத்து அழகர்சாமி திண்டுக்கல் மாவட்டம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஜாபர்சாதிக் குறித்து புகார் செய்துள்ளார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அழகர்சாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்கிய லஞ்சஒழிப்பு போலீஸார் ஜாபர்சாதிக்கிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., ஜான் டெமண்ட், இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், சுந்தர்ராஜன் மற்றும் போலீஸால் சாதாரண உடையில் தொப்பம்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு மேற்கொள்ள அலுவலகத்துக்கு வந்த அழகர்சாமி ரசாயனம் தடவிய நோட்டுக்களை ஜாபர்சாதிக்கிடம் கொடுத்து விட்டு போலீஸாருக்கு சிக்னல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஜாபர்சாதிக்கை சுற்றி வளைத்து லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர்சாதிக் ஓய்வு பெற சில வருடங்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தது அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.