முதலை பிடித்து இழுத்துச் சென்றவரின் உடல் கிடைக்கவில்லை: பொதுமக்கள் சாலைமறியல்
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பெட்டிக்கடை உரிமையாளர் பாண்டுதுரையை (52) புதன்கிழமை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. 2-ம் நாளாக
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பெட்டிக்கடை உரிமையாளர் பாண்டுதுரையை (52) புதன்கிழமை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. 2-ம் நாளாக தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. உடலை தேடித்தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம்சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியில் பழைய கொள்ளிடம் அருகே சீர்காழி மெயின்ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் பாண்டுதுரை (52) என்பவர் வழக்கம் போல் புதன்கிழமை காலை பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது அவரை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்த ஊர்மக்கள் கல்லால் அடித்தும், அவரை இழுத்துச் சென்றது. அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் புதன்கிழமை முழுவதும் தேடினர். 2-ம் நாளான வியாழக்கிழமை வனத்துறையினர் படகு மூலம் உடலை தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி படகுகள் மூலம் தேடுவதாக உறுதியளித்ததை அடுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்-சீர்காழி நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் சீனுவாசன் முன்னிலையில் கிள்ளையிலிருந்து 2 ரப்பர் படகுகள் வரவழைக்கப்பட்டு, முதலை பிடிக்கும் நந்தீஸ்வரமங்கலம் ராஜூ குழுவினருடன் இணைந்து தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் வியாழக்கிழமை முதலை இழுத்துச் சென்ற பாண்டிதுரையின் உடலை தேடி வருகின்றனர்.