தூத்துக்குடி பொறியாளர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூருவில் வேலைபார்த்த தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூருவில் வேலைபார்த்த தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஸ்டாலின் சீனிவாசன் (27). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாள்களாக அவருக்கு காய்ச்சல் இருந்ததாம்.
பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்ற ஸ்டாலின் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்து வருவதால் உடனடியாக ஸ்டாலின் சீனிவாசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான முதல்கட்ட அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் சீனிவாசனுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் கூறுகையில், ஸ்டாலின் சீனிவாசனுக்கு வைரஸ் காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு பன்றிக்காய்ச்சலோ, பறவைக் காய்ச்சலோ இருப்பதாக எந்தவித சோதனையும் நடத்தப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.