பிரசவத்தில் தாய், குழந்தை இறப்பைத் தொடர்ந்து சரியாக சிகிச்சை அளிக்கவில்லையெனக் கூறி விருதுநகர் அரசு மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரின் மனைவி கனிமொழி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த வியாழக்கிழமை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகி்சசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து கனிமொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதற்கு மருத்துவர்கள் தீவிரமாக கிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சனிக்கிழமை காலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பிறந்த குழந்தையும் உயிரிழந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தாலும், போதிய சிகிச்சை அளிக்காத காரணத்தாலும் தாயும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாக கூறினர். அதையடுத்து மருத்துவர்களை கண்டித்து கனிமொழியின் உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனிமொழி உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதார பிரிவு இணை இயக்குநர் கதிரேசன் கூறுகையில், சிகிச்சையில் எந்தக் குறைபாடும் இல்லை. அப்பெண் பிரசவத்திற்கு வரும் போதே பல்வேறு பாதிப்புகளுடன் வந்தாகவும், அதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.