நியூயார்க்: உரி தாக்குதல் சம்பவத்துக்கான காரணத்தை திசை திருப்பும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறிய விளக்கம் இனிமேல் பலனளிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஓய்வெடுத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக நீடிக்கும் வன்முறையால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உரி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்'' என்றார்.
அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர், நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரச்னையை திசை திருப்பும் நோக்கத்தில் நவாஸ் ஷெரீஃப் அளித்த விளக்கம், நியூயார்க் நகரில் எடுபடவில்லை; லண்டனிலும் எடுபடாது. பாகிஸ்தானில் கூட அவரது விளக்கம் பலனளிக்காது.
வறுமையை ஒழித்து, வளர்ச்சியைப் பெருக்குவதில் ஒத்துழைப்புடன் பாடுபட வேண்டும் என்ற இந்தியாவின் நல்ல நோக்கத்தை உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மனித உரிமைகளுக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக இருப்பது பயங்கரவாதம். அந்தப் பயங்கரவாதத்துக்கு நாம் முடிவுகட்ட வேண்டும் என்றார்.