திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி இடம் மாற்றப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார் என அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததும், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி, அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும் என குறிப்பாணை அனுப்பினார்.
பள்ளி நிர்வாகம் அதனைப் பெற்று கொண்டது. ஆனால் ஆட்சியரின் உத்தரவைப் பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுபற்றி வழக்குப் பதிவு செய்யும்படி போலீசையும் கேட்டுக் கொள்வோம் என்றும் ஆட்சியர் மேரிகுட்டி தெரிவித்திருந்தார்.
இதனிடையே மேரிகுட்டி இடமாற்றம் செய்யப்பட்டு, பஞ்சாயத்து இயக்குநராகப் பதவி வழங்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. கேரள மாநில அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பினராயி விஜயன், மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமான நடைமுறைதான் என்று விளக்கமளித்துள்ளார்.