புதுதில்லி: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது பாகிஸ்தான் கடலோரக் காவல்படை. மேலும், மீனவர்கள் பயன்படுத்திய ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரபிக் கடலில் இந்திய - பாகிஸ்தான் எல்லையின் அருகே மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஏற்கெனவே, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பலர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர்.
இந்நிலையில், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது பாகிஸ்தான் கடலோரக் காவல்படை. மேலும், மீனவர்கள் பயன்படுத்திய ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதகமாக மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 28 மீனவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் முகமத் பைசல், “நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள 291 மீனவர்கள் அடுத்த வாரம் வரும் 29-ஆம் தேதி மற்றும் ஜனவரி 8-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்”, எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், 28 பேர் கைது செய்துள்ளது பாகிஸ்தான் கடற்படை. இந்த ஆண்டு மட்டும் 400-க்கும் அதிகமான இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.