தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகரில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக புதுதில்லியிருந்து தர மதிப்பீட்டு குழுவினர் ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்தனர்.
நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் நகராட்சிகளை தேர்வு செய்து அதனை மதிப்பீடு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றனர்.
அதற்காக நாடு முழுவதும் 500 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆம்பூர் நகரமும் ஒன்றாகும். ஒவ்வொரு நகருக்கும் மொத்தம் 2 ஆயிரம் மதிப்பெண்கள் ஆகும். அந்தந்த நகரங்களில் நடைபெற்று வரும் துப்புரவு மற்றும் சுகாதார பணிகளின் அடிப்படையில் அந்த நகரங்களுக்கு தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்குவார்கள். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த குழுவினர் ஆம்பூர் நகரில் நேதாஜி ரோடு, பேருந்து நிலையம், உமர்சாலை, பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தண்டபாணி, நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.