புதுதில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 2,004 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்பு படை, விமானப் படை ஆகியோரின் உதவியுடன் 405 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரில் சென்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிப்படைந்துள்ளோரின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தின் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் வெள்ளம் மாநிலத்தின் வளர்ச்சி பயணத்தை பாதிக்காது என்றும் கூறினார்.