சிதம்பரம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மா.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றறின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ம.ஆதனூர் கிராமத்திற்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என கடந்த 4-8-2014ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்பு செய்து 3 ஆண்டுகள் ஆகியும் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்படவில்லை. இதனை கண்டித்து கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில்
ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கு நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் கைகோர்த்து நின்று மனித சங்கிலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டத்திற்க்கு விவசாய சங்க தலைவர் பி.வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.அன்பழகன், சின்னதுரை, செந்தமிழ்ச்செல்வன், சோமசுந்தரம், கண்ணன், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் புருஷோத்தமன், மதிவாணன், மோகன்குமார், குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தி.பரமேஸ்வரன், க.திருநாவுக்கரசு, மு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
வருகிற 28-6-2017 ந்தேதிக்குள் பொதுப்பணித்துறை நிதிஒதுக்கி பணிகளை தொடங்காவிடில் ஜூன் 30-ம் தேதி தமிழக முதல்வர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சீர்காழி, திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீடுகள் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.