ஆத்தூர்: அதிமுகவின் இரு அணிகளும் இணையவே வாய்ப்பில்லை என அதிமுக அம்மா அணியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
டீக்கடை வைத்திருந்த பன்னீர்செல்வத்தை முதல்வராக ஜெயலலிதா அறிவித்தார். அவரால் இந்த தமிழகம் படாத பாடுபடுகிறது. மேலும் அதிமுகவின் இரு அணிகளும் 100 சதவீதம் சேர வாய்ப்பில்லை.
பதவியில் இருக்குமேபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகமும் எழுப்பாத பன்னீர்செல்வம், பதவிபோனதும் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்.
முதல்வர் ஜெயலலிதாவை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்போது சிறையில் உள்ளார். அதிமுகவை வழிநடத்த சசிகலாவால்தான் முடியும். அவர் விரைவில் மீண்டு வருவார்.
எதற்காக பன்னீர்செல்வத்திற்கு ‘ஒய்’ பாதுகாப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது என்று தெரியவில்லை. பன்னீரும் ஸ்டாலினும் சேர்ந்து அதிமுகவை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர் என்றார்.
மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவதாக உளவுத்துறை கூறியதால் தேர்தலை ரத்து செய்துவிட்டனர்.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்க உள்ளனர். பன்னீர்செல்வம் அணி விரைவில் காணாமல் போய்விடும். கட்சி தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம். அதிமுக பயணம் தொடரும், யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.