கடலூர்: சரியான சூழல் வரும்போது அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்றார் மாநில செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.
கடலூரில் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலூரில் சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நிரந்தரமாக அரசின் பொருள்காட்சி நடத்தப்படுகிறது. சுழற்சி முறையில் 3 மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல் நிரந்தர பொருள்காட்சி நடத்துவதற்கு ஆவண செய்யப்படும்.
அதிமுகவின் இரு அணிகளும் சரியான சூழல் வரும்போது இணையும். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இரு அணிகளாக, இரு சின்னங்களில் செயல்பட்டோம். பின்னர் ஒன்றாகி இரட்டை இலை சின்னத்தைப் பெற்று வெற்றி பெற்றோம். இரு அணிகள் இணைப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் என்றார் அமைச்சர்.
மேலும், ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் ஊடகங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எனவே, தனியாக சட்டங்கள் ஏதும் இயற்ற வேண்டியதில்லை என்றார்.