புதுச்சேரி கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் குழந்தைகள் 1165 பேருக்கு ரூ.53.6 லட்சம் கல்வி உதவித் தொகையை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை வழங்கினார்.
புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகளின் குழந்தைகளுக்கு 2014-15-ம் ஆண்டு்க்கான மருத்துவம், பொறியியல், பொறியியல் பட்டயப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டய மேற்படிப்பு மற்றும் பொறியியல் அல்லாத பட்டயப்படிப்பிற்கான கல்வி நிதி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ரீனா மஹாலில் நடைபெற்றது.
தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன் வரவேற்றார். பிடிடிசி தலைவர் பாலன் முன்னிலை வகித்தார். நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். கல்வி உதவித் தொகையை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு காப்புறுதி திட்டமும் இல்லை, நீதிமன்றத்தை அணுகியே உதவித்தொகை பெற்று வந்தனர்.
புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட 54 தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு மட்டுமினறி, குடும்பத்தாருக்கும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்ய உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றோம். முதியோர் உதவித்தொகை ஜூன் மாதம் முதல் வீடு தேடி வரும். முன்பு 2 ஆண்டுகள் முடிந்தாலும் சென்டாக் நிதியுதவி தர மாட்டார்கள். ஆனால் தற்போது ஆண்டுதோறும் தரப்படுகிறது.
இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, சென்டாக் நிதியுதவி ஆகிய மூன்று திட்டங்களுக்கான நிதியையும் மாற்றி செலவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மத்திய அரசை அணுகி நிதி கேட்கவில்லை, அதனால்தான் தற்போது நிதி தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கின்றோம்.
தொழிற்சாலைகள் வருகையாலும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்பட்டால்தான் வருமானம் உயரும், அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றோம்.
நானும், சுற்றுலாத்துறை அமைச்சரும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை புதுப்பிக்கவும், சுற்றுலா த்துறையை நவீன மாக்கவும் ரூ.124 நிதி கேட்டுள்ளோம். அந்த தொகையை தருவதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளும் ஒத்துழைப்புத்தர வேண்டும். பணமதிப்பு இழப்பு, உச்சநீதிமன்றத்தால் மதுக்கடைகள் மூடல், உயர்நீதிமன்றத்தால் ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்பு ஆகியவைகளால் ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டட தொழிலாளர்கள் பணியின்போது உயிர் இழந்தால் கொடுக்கப்பட்டுவரும் நிதியுதவியை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தவும், உடல் ஊனம் ஏற்பட்டால் கொடுக்கப்படும் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், கட்டிட தொழிலாளர்களின் பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், மகப்பேறு உதவித்தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்த உள்ளோம்.
அதுபோல் மருத்துவ உதவித்தொகையை ரூ.750ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்த உள்ளோம். மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளோம். கட்டுமான பணியின்போது விழுந்து காயமுறும் தொழிலாளர்களை மருத்துவமனையில் சேர்க்க கட்டட தொழிலாளர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் தனி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த உள்ளோம்.
அரசின் அனைத்து சலுகைகளும் உண்மையான உறுப்பினர்கள் மட்டுமே பயனடைய வேண்டும். நிறைய பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.