தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தானில் ஜப்பான் உதவியுடன் தொழில்நகரங்கள் அமைக்கப்படும் என்று அகமதாபாத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மோடி மற்றும் அபே இருவரும் இணைந்து திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஜப்பான் - இந்தியா உச்சிமாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தானில் ஜப்பான் உதவியுடன் தொழில்நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்திய தபால் துறை மற்றும் ஜப்பான் தபால் துறை ஆகியவை இணைந்து செயல்பட உள்ளது. இதனால் இந்தியாவில் வாழும் ஜப்பானியர்கள் தங்களுக்கு பிடித்தமான ஜப்பானிய உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். மேலும், இந்தியாவில் அதிக அளவிலான ஜப்பானிய ஓட்டல்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.