ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது தொடங்கியுள்ள அரசியல் கட்சியை பங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது தொடங்கியுள்ள அரசியல் கட்சியை பங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, அண்மையில் மில்லி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். மேலும், சில கட்சிகளுடன் சேர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
ஆனால், அந்தக் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹபீஸ் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் (மார்ச் 9) ஹபீஸின் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
Advertisement
இதற்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியா. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் கூறுகையில், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்படுவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஹபீஸ் சயீது, ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி அப்பா இந்திய மக்களை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டவர்களையும் கொன்றவர் ஹபீஸ் என்பதை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
தங்கள் நாட்டில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல், அவர்களை அரசியல் தலைவர்களாக அங்கீகரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இதன் மூலம் பயங்கரவாதிகள் விஷயத்தில் அந்நாடு எந்த அளவுக்கு ஏமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாதி ஹபீஸ் சயீது தொடங்கியுள்ள அரசியல் கட்சியை பங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் வெளிநாடு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
ஏற்கனவே, ஹபீஸ் சயீதை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.