காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், தற்போதைய அதிமுக அரசு நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நடைபயணம் ஆண்டிப்பட்டி வந்தடைந்து. அப்போது வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கா கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக நியூட்ரினோ ஆய்வு மையத்தை தொடங்க மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆய்வு மையம் அமைவதன் மூலம் உலகின் எந்த நாட்டில் உள்ள அணுஆயுதங்களையும் செயல்இழக்க செய்யமுடியும்.
5 மாவட்டங்கள் சுடுகாடாகும்: அணுயுத்தம் தொடங்கினால் உலகநாடுகள் தாக்கும் முதல் இடமாக தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வு மையம் இருக்கும். இதன்மூலம் தென்னகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் சாம்பல் காடாக மாறி சுடுகாடாகிவிடும்.
மத்திய அரசிடம் அடிமை: நியூட்ரினோ ஆய்வு மையத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாமல் தமிழகத்தை தேர்வு செய்தது எதற்காக? மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாகிவிட்டது.
வரலாறு மன்னிக்காது: மத்திய அரசுக்கு துணைபோகும் தமிழக அரசை வரலாறு என்றும் மன்னிக்காது. எங்களை பொறுத்தவரை தமிழகம் மட்டுமின்றி நியூட்ரினோ ஆய்வு மையம் இந்தியாவின் வேறு எங்கும் தொடங்க கூடாது. தமிழக அரசு தனது சுயமரியாதையை இழந்து மக்களை காவுகொடுக்க தயாராகிவிட்டது.
ஜெயலலிதா மறுப்பு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசின் நிர்பந்தத்தால் தற்போதைய அதிமுக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரலாற்றில் எட்டப்பர் வரிசையில் சேர்க்கும் நிலை ஏற்படும் என்றார்.
32 ஆண்டு போராட்டம்: ஸ்டெர்லைட் பிரச்னைக்காக கடந்த 32 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது அந்த ஆலையின் தீமையை உணர்ந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் எனது நோக்கம் நிறைவேறியதாக உணர்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயாராக இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்தபோது மேலாண்மை வாரியம் அமைப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் மேனேஜ்மெண்ட் போர்டு அமைக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழக அரசுக்கு தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக இன்று உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்காது என்று வைகோ கூறினார்.