நேபாளம்: பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு
நேபாளத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்ட நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு
காத்மண்டு: நேபாளத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்ட நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இந்திய அரசின் உதவியுடன் காத்மாண்டுவிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தும்லிங்டார் பகுதியில் காண்ட்பரி 9 என்ற இடத்தில் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி நேபாளம் சென்ற பிரதமர் மோடி மற்றும் அப்பொழுது பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா முன்னிலையில் திட்ட வளர்ச்சிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த திட்டம் 2020-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும். இந்த திட்டத்திற்கான அலுவலகத்தினை பிரதமர் மோடி வருகிற மே 11-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
Advertisement
இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்ததில் அதன் தெற்கு பகுதியில் உள்ள சுவர் சேதமடைந்து உள்ளது. யாரும் காயமடையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட தலைமை அதிகாரி சிவா ராஜ் ஜோஷி தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஒரு மாதத்திற்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு ஆகும். கடந்த 17-ஆம் தேதி நேபாளத்தின் பீரட்நகரில் அமைந்த இந்திய தூதரக அலுவலகம் அருகே குக்கர் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் அதன் சுவர்கள் சேதமடைந்தன.