திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் ஒரே இரவில் 9 கடைகளில் திருட்டுப் போன சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காங்கயம் சாலை எச்.பி. பெட்ரோல் பங்க் அருகிலுள்ள டிரைவிங் ஸ்கூல், பழைய தீயணைப்பு நிலையம் அருகில் எலக்ட்ரிக்கல் கடை, தாராபுரம் சாலை எல்.கே.ஏ. டவர் லைட் வணிக வளாகத்தில் மளிகைக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, செல்லிடப்பேசி கடை உள்ளிட்ட நான்கு கடைகள், சிவநாதபுரத்தில் பவர் லூம் ஸ்பேர் பார்ட்ஸ், பேக்கரி, உள்ளிட்ட மூன்று கடைகளை வழக்கம் போல அவற்றின் உரிமையாளர்கள் இரவு பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.
காலையில் வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுப் போனது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக டிரைவிங் ஸ்கூலில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், சிவநாதபுரம் பவர் லூம் ஸ்பேர் பார்ட்ஸ் கடையிலிருந்து 75 ஆயிரம் ரூபாய் ஏலச்சீட்டு பணத்தைக் காணவில்லை.
ஒட்டு மொத்தமாக ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் அரிவாள், கத்தி, சுத்தியல் ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவத்தில் சாவகாசமாக ஈடுபட்டது ஒரு கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிவநாதபுரத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளைக் கும்பல் உள்ளே மதுபானம் குடித்து, சாப்பிட்டு, கழிவறையைப் பயன்படுத்திச் சென்றுள்ளனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இதே போல 15 பவுன் தங்க நகைகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், முத்தூரில் ஒரு கார் திருட்டுப் போனது குறிப்பிடத்தக்கது.
புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் வெள்ளக்கோவில் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.