சென்னை: வேலை நிறுத்தம் நடந்தால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டன.
இதையடுத்து அரசு தரப்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று பேச்சு வாத்தை நிறுத்தப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
வேலை நிறுத்தத்தால் மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. அண்மையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் போரட்டத்தால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கபட்டனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் இன்னும் அதிக பாதிப்பை அடைய வாய்ப்புள்தாக தெரிகிறது. இந்நிலையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன. ஒரு சில தொழிற்சங்கம் மட்டுமே வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலேயே சிஐடியூ வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வேண்டுமென்றே சிலர் மின்வெட்டு ஏற்படுத்தினால் அரசிடம் மக்கள் புகாரளிக்கலாம் என்று கூறினார். மேலும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.