திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சொத்துத் தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பனவடலிசத்திரம் அருகேயுள்ள ஆயாள்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி வெற்றிசெல்வி (64). கருத்து வேறுபாடு காரணமாக வெற்றிசெல்வி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். இவரது மகன் சுரேஷ்குமார். வேலூரில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வெற்றிசெல்வியை காணவில்லை என சுரேஷ்குமாருக்கு அவரது உறவினர் தகவல் தெரிவித்தனர்.
ஊருக்கு திரும்பிய சுரேஷ்குமார், பல இடங்களில் தேடியும் தனது தாயார் கிடைக்காததால் பனவடலிசத்திரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆயாள்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் பால்ராஜ் (38). இவருக்கும் வெற்றிசெல்விக்கும் இடையே ஒரு சொத்தை
கிரையம் வாங்கியது தொடர்பாக விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பால்ராஜ் தன்னை மிரட்டுவதாக வெற்றிசெல்வி அளித்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த வெற்றிசெல்வியை பால்ராஜ், காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், அவரது உடலை பனவடலிசத்திரத்தில் செப்டிக் டேங்க் அருகில் வைத்து எரித்து தடயத்தை மறைத்ததும் தெரியவந்தது.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை (35), பாக்கியராஜ் (38) ஆகியோர் பால்ராஜூக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸார்
வெற்றிசெல்வியை கொலை செய்த வழக்கில் மூவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட 4 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிளாட்சன் பிளஸ்டு தாகூர், குற்றவாளி பால்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதம் விதித்தார்.
கொலை செய்து எரித்து தடயத்தை மறைத்த குற்றத்திற்காக பால்ராஜூக்கு 5 ஆண்டு சிறையும், ரூ. 1000 மும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.