தற்போதைய செய்திகள்

சென்னையில் பயங்கரம்: 15 வயது சிறுவனை சிறுவர்களே கொன்று சுடுகாட்டில் புதைத்த கொடூரம்!

DIN

சென்னை சூளைமேட்டில் 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த 1 இளைஞன், 3 பள்ளி சிறுவர்கள் என 4 பேர் 6 மாதத்திற்கு பின்னர் போலீஸில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை சூளைமேடு சித்ரா அபார்ட்மென்ட் பிளாட்பாரத்தில் வசித்துக்கொண்டு பழைய புத்தகங்கள் விற்று வருபவர் பெருமாள் (55). இவரது மகன் ராஜேஷ் (15). இவர் தந்தையுடன் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி 14 பொங்கலன்று நுங்கம்பாக்கம் அருகே இருக்கும் மைதானம் ஒன்றிற்கு விளையாட சென்ற மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று ஜனவரி 21-ஆம் தேதி நுங்கம்பாக்கம் சூளைமேடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து காணாமல் போன ராஜேஷை போலீஸார் தேடி வந்தனர். போலீஸார் பலரையும் பிடித்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் போலீஸாருக்கு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதாவது காணாமல் போன ராஜேஷுக்கு சமூக விரோதிகள் சிலருடன் தொடர்பு இருப்பதும், கொலை, வழிப்பறி வழக்கில் சமீபத்தில் கைதான சிலருக்கு சின்ன சின்ன வேலைகளை ராஜேஷ் செய்து கொடுத்தது வந்துள்ளான். சமூக விரோதிகளை ஹீரோவாக நினைக்கும் வழக்கமான பால பருவப் பிள்ளையாக ராஜேஷ் வலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து ராஜேஷ் காணாமல் போனதால் சம்பந்தப்பட்டவர்களின் எதிரிகள் யாராவது கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையில் தீவிரம் காட்டி வந்துள்ளனர். ஆனால் காணாமல் போனதற்கான தடையமோ, கொலைக்கான தடையமோ எதுவுமே கிடைக்காமல் விசாரணையில் முன்னேற்றம் ஏதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில், ராஜேஷுடன் கடைசியாகத் தொடர்பில் இருந்த ஒருவரை போலீஸார் காவல் நிலையம் அழைத்து தீவிரமாக விசாரணை நடத்திவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில்தான், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த பரத்குமார் (19) மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் 17 வயதுடைய 2 பேர் என நான்கு பேர் நூங்கம்பாக்கம் போலீஸில் சரணடைந்தனர்.

அவர்களிடம் காணாமல் ராஜேஷ் எங்கே என போலீஸார் விசாரித்தபோது, அவனை ஆறு மாதத்துக்கு முன்பே கொன்று புதைத்துவிட்டோம் என அவர்கள் சாதாரணமாக கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அன்று கையில் கத்தியுடன் சூளைமேடு சுடுகாட்டுக்குள் ராஜேஷ் சென்றுள்ளான். அப்போது அங்கு பரத்குமார் உள்ளிட்ட 4 நண்பர்களும் இருந்துள்ளனர். ராஜேஷ் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது நான்கு பேரும் சின்னப்பையன் ஒருவன் தங்களை மிரட்டுவதா என்று ராஜேஷைத் தாக்கியுள்ளனர்.

இந்த மோதலில் நான்கு பேரில் தற்போது தலைமறைவாக இருக்கும் சிறுவன் ராஜேஷின் கையை முறுக்கி ராஜேஷிடமிருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்த ராஜேஷ் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவரை காலால் மிதித்தே கொன்றதுடன் பிணத்தை அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்.

பின்னர் 4 பேரும் யாரிடமும் யாரும் எதையும் உளறிவிடக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு பிரிந்து சென்றுள்ளனர். அதன்படி கடந்த 6 மாதமாக போலீஸாரிடம் இருந்துவந்துள்ள நிலையில், போலீஸ் விசாரணை வலையத்தின் பிடி இறுகியதால் தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்பதால் தாங்களாகவே நேரில் வந்து சரணடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேரில் ஒரு சிறுவன் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

மேலும், சுடுகாட்டில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் ராஜேஷின் உடலை வட்டாசியர் முன்னிலையில் தோண்டியெடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கை யார் விசாரிப்பது என சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் போலீஸார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சரணடைந்த பரத்குமார் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் சூளைமேடு சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்து வருகின்றனர். 

இச்சம்பவம் சென்னை வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT