அமராவதி: நான்காவது சர்வதேச யோகா தினத்தையொட்டி அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரக்கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்று. "ஒருவரின் உடல், மூளை மற்றும் ஆத்மாவை ஒன்றாக இணைக்கிறது யோகா. எனவே, ஒரு சமாதான உணர்வை யோகா உருவாக்குகிறது. டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகார்த்தா முதல் ஜொஹனஸ்பர்க் வரை எங்கு நோக்கினாலும் யோகா தான் என்றும் கூறினார். அனைவரையும் ஒன்றிணைக்கும் வலிமையான ஆற்றலாக யோகா திகழ்கிறது.
யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. உலகிற்கே இந்தியா அளித்த பரிசு யோகா. நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனம், அறிவு, உடலை இணைத்து அமைதியை உருவாக்குகிறது யோகா என்றார்.
ஆந்திராவின் அமராவதி நகரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வரும் நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு யோகா பயிற்சியை செய்தார்.