திருநெல்வேலி: ராம ராஜ்ஜிய ரதம் வருகையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த மாதம் 13ஆம் தேதி அயோத்தியில் தொடங்கி, கேரள எல்லை வழியாக செங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) வந்தடைந்தது. இதையொட்டி, ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரையையொட்டி, உரிய பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இம்மாதம் 19 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ரதத்தை எதிர்க்கும் அல்லது மறிக்க நினைக்கும் நபர்கள், 5 அல்லது அதற்கும் மேற்பட்டோர் கூடுதல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் நபர்கள் கூடுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், செங்கோட்டை - புளியங்குடி பகுதிகளில் சுமார் 1000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர 32 சோதனை சாவடிகள் மற்றும் வாகன சோதனையும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில், ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துளது.