டோக்லாம் எல்லையில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது.
இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 72 நாட்கள் நீடித்து பின்னர் அமைதி நிலைக்கு திரும்பியது. ஜூன் 16-ஆம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை டோக்லாமில் இருதரப்பு இடையேயும் மோதல் போக்கு நீடித்தது.
இதனையடுத்து இருதரப்பு உயரதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன. ஆனால், சீனாவின் நிலைமை மாற்றப்படவில்லை என்றும் சீனா மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய பாதுகாப்புத்துறை அகாடமிக்கான நுழைவுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்களைச் சந்தித்து அவர் உரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசுகையில், டோக்லாமில் எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இந்திய ராணுவம் நவீனமயப்படுதும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நமது பிராந்திய அமைதியை ஒருமைப்பாட்டை தொடர்ந்து காப்பாற்றுவோம் என்று கூறினார்.
டோக்லாம் பகுதியில் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி வரும் சீனாவுக்கு, மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.