சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோதே, அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருந்துள்ளது. அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பலரும் சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிக அளவில் இனிப்பு வகைகளை உட்கொண்டதாகவும், இந்த தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு, நவம்பர் 22-ஆம் தேதி மட்டும் லட்டு, குலோப்ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளை ஜெயலலிதா அதிக அளவில் உட்கொண்டதாகவும், டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கை அவர் பருகியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவுப்பட்டியல் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வகைகளை கொடுத்ததா, அல்லது மருத்துவர்களின் அறிவுரையை மீறி ஜெயலலிதா இனிப்பு வகைகளை கேட்டு சாப்பிட்டாரா? யார் அவருக்கு இனிப்பு வகைகளை வரவழைத்து கொடுத்தது? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.