ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரின் பாதுகாவலரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் உறவினர் முஃப்தி சஜத் மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், முஃப்தி சஜத் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பிஜ்பெஹராவில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளார். அவரது தனி பாதுகாவலர் பரூக் அகமது மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் மசூதியின் வெளியே நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் பி.எஸ்.ஓ பரூக் அகமதுவை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் பரூக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முஃப்தி சஜத் பாதுகாப்பாக இருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனர்.