முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த நட்சத்திர விடுதியில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் 30 கரோனா நோயாளிகள், 10 ஊழியர்கள் இருந்த நிலையில், தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. 30 பேர் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பலர் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே விஜயவாடா தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 'கரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீ விபத்தில் தங்களுடைய குடும்பத்தாரை இழந்தோரை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். தீ விபத்தில் காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். விஜயவாடாவில் நிகழும் சூழல் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஆலோசித்து கேட்டறிந்தேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று விஜயவாடா தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 'தீ விபத்து  ஏற்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆந்திர அரசுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படும். இக்கட்டான கரோனா சூழலில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல். தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

விஜயவாடா தீ விபத்து  குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →