ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாண்டியா, சாம்ராஜ் நகர் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் சுமார் 1.50 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவுகளும் குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளும் குறைக்கப்பட்டன.
இதனையடுத்து கடந்த சில தினங்களாக இரு மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், இரு அணைகளில் இருந்தும் சுமார் நொடிக்கு 44 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது புதன்கிழமை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
பின்னர் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் தற்போது நீர்வரத்து நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவின் போது வெளியே தெரிந்த பாறை திட்டுக்கள் அனைத்தும் தற்போது நீர் வரத்து அதிகரிப்பால் மூழ்கி காணப்படுகிறது.
பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.