திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 54க்கு உள்பட்ட கல்லாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி நகர், ஆதவன் நகர், அருள்ஜோதி நகர், அங்காளம்மன் நகர் சின்னபழனிசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சி.அருணாசலம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கல்லாங்காடு நால்ரோடு பகுதியில் திரண்டனர். பின்னர் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கவும், உப்புத்தண்ணீர் வாரத்துக்கு ஒரு முறை விநியோகிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வீரபாண்டி காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பேரில் மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.வடிவேல், பாரதி, கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.