தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி கரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகள் கடைசி கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாநில சுகாதார செயலாளர்களிடம் காணொளி மூலம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் பேசினார்.
அதன் பிறகு வெளியான செய்தியில் மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது:
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், ஜனவரி 2ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடக்கவுள்ளது. ஆகையால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிக்கு தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப், அசாம், ஆந்திரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.