விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் அடுத்தடுத்து இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் ஆகியுள்ளன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று மாலை அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளன.
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் வீட்டில் இருந்தபடியே ஃபோட்டோஷாப் வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் முத்து முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். அடுத்தடுத்து அமைந்துள்ள அண்ணன் தம்பிகளின் வீடுகள் இரண்டும் நேற்று பெய்த கனமழையால் முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் ஆகியுள்ளன. அப்போது இருவரின் வீட்டிலும் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
ஆனால் வீட்டிலிருந்தபடியே போட்டோஷாப் தொழில் செய்துவரும் கணேசனின் வீட்டில் இருந்த கணினி ப்ரிண்டர் கேமரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் முற்றிலும் சேதமாகின. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.