சமூக வலைத்தளங்களில் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் விளம்பர பலகை வெளியிட்டு பாராட்டியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 114 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க பொதுமக்கள் வெளியில் வரும் போது குடை பிடிக்க வேண்டும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வையும் சுட்டுரை, முகநூல், கட்செவி அஞ்சலில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 12 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் சமூக வலைத்தளத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு விளம்பர பலகை வெளியிட்டு கெளரவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் செயல்களால் கவரப்பட்ட திருப்பூர் மக்கள் டாக்டர் விஜய்கார்த்திகேயன் பேன்கிளப் என்ற பெயரில் பக்கம் தொடங்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கெஸ்ட் ஒர்க்கர்ஸ் என்று அழைத்து அவர்களை மகிழ்ச்சியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.