மயிலாடுதுறை: நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநில தொழிலாளர்கள் 38 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் தங்கி மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அந்தந்த பகுதிகளில் வருவாய்த் துறையினரால் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மத்திய அரசு பொதுமுடக்க உத்தரவில் தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளதால் நாகப்பட்டினம் பகுதியில் தங்கியிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 14 பேர், மயிலாடுதுறை பகுதிகளில் தங்கியிருந்த 24 பேர் என மொத்தம் 38 பேர் மயிலாடுதுறையிலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு இரண்டு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் மயிலாடுதுறை வட்டாட்சியர் ஆர்.முருகானந்தம், மண்டல துணை வட்டாட்சியர் வைத்தியநாதன், வருவாய் அலுவலர் தேவகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர்.