திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
திண்டுக்கல் அருகே குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை பலியாகினர்.
திண்டுக்கல் அருகே குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை பலியாகினர்.
திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜின் மகன் சஜித் புருனோ (வயது 13), பாலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ராகுல் (13), கொசவப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதிஷ் அருளானந்தம் (13) ஆகிய மூவரும் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்கள் மூவரும், மேலும் 2 சிறுவர்களுடன் பாலமரத்துப்பட்டி பகுதியிலுள்ள கொண்டையன்பிள்ளை குளத்தில் குளிப்பதற்காக புதன்கிழமை சென்றுள்ளனர்.
கடந்த சில நாள்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால், குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்தது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித், தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற ராகுல் மற்றும் சதிஷ் ஆகியோரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற சிறுவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர்.
அதன் மூலம் நிகழ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் சென்று தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்களையும் சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.