விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே வந்தவாசி என்ற ஆயகுளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அ.முக்குளம் அருகே வந்தவாசி என்ற ஆயகுளம் கிராமத்தைச் சேர்ந்த விஜய பாலாஜி இவரது 8 வயது மகன் சந்தோஷ் குமார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது 9 வயது மகன் அழகு திவாகரன் இவர்கள் இருவரும் இன்று மதிய உணவிற்குப் பின் விளையாட சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லேசான மழை பெய்ய தொடங்கியதால் நீண்ட நேரம் ஆகியும் விளையாடச் சென்ற சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் அருகிலிருந்த மற்ற சிறுவர்களை விசாரித்த பொழுது இருவரும் கண்மாயில் விளையாடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கண்மாய்க்குள் சென்று தேடிய பொழுது நீருக்குள் மூழ்கி கிடந்த சிறுவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு அ.முக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இத்தகவலை அறிந்து இருவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்ப்போர் மனதை பதறச் செய்வதாக இருந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் இருப்போரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.