நாட்டில் உள்ள 513 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது.
நாட்டின் தற்போதைய கரோனா நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
கடந்த மே 3ஆம் தேதி முதல் பாதிப்பு குறைந்து வருகின்றது. தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருவோரின் விகிதம் 96 சதவீதமாக உள்ளது. மேலும், கரோனா உறுதியாகும் எண்ணிக்கையும் குறைந்து கொண்டுள்ளது. ஜூன் 17 ஆம் தேதி தரவுகளின்படி 513 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 75-80 சதவீதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படவில்லை. மீதமுள்ள 8 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உதவி தேவைபடுகிறது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் எய்ம்ஸ் ஆய்வின் படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், குறைவானவர்களுக்கும் சமமான அளவிலேயே கரோனா உறுதியாகிறது. குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும், லேசான அளவிலேயே தொற்று ஏற்படுகிறது.
மேலும், கரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுவது ஆதரமற்ற தகவல். இருப்பினும் அதை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.