ஹைதராபாத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இன்று அதிகாலை வேலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: குஷைகுடா பகுதியில் உள்ள மரக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கும் பரவியது. இதில், அந்த குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரான நரேஷ்(37), அவரது வயது மனைவி(32) மற்றும் அவர்களது ஏழு வயது மகன் ஆகியோர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் பலியாகினர். மேலும், 4 பேர் லேசான காயங்களுடன் தப்பியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து மரக் கிடங்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் சமயைல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கத்வால் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.