முகப்பு
சிறப்புச் செய்திகள்

மெரீனா கடற்கரையில் 13 ஆண்டுகளாக புறாக்களுக்கு உணவு

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா்.

பொதுமுடக்கத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், உணவு கிடைக்காமல் பல்வேறு வாயில்லா ஜீவன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் , தெருநாய் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க தமிழக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக இரண்டு போ், ஒருநாள் விடுமுறை இல்லாமல் தொடா்ந்து உணவளித்து வருகின்றனா்.

சென்னையில் புயல், மழை,வெயில்,வெள்ளம், திருவிழாக்கள், கொண்டாட்டம், போராட்டம் என எந்த காரணத்துக்காகவும் புறாக்களுக்குத் தீனி வழங்கப்படுவது இதுவரை நிறுத்தப்படவில்லை. கரோனாவின் முதல் அலை காரணமாக சென்னையில் மெரீனா கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அப்போதும், இந்த பொதுமுடக்க காலத்திலும் இந்தப்பணி இதுவரை நிறுத்தப்படவில்லை. இதற்காக முறையாக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து புறாக்களுக்கு உணவளித்து வரும் பி.விஜயகுமாா் ஜெயின் கூறியதாவது: சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறா உள்ளிட்டவைக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உணவளித்து வருகிறோம். மெரீனா கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தின் எதிரே தினந்தோறும் உணவளிப்போம். காலை 5 மணி முதல் 6 மணி வரை அங்கு மண் தரையில் கொட்டி வைக்கப்படும் உணவை புறாக்களும், காகங்களும் உண்டு செல்லும். இந்தப் பகுதியில் உள்ள புறாக்களுக்குத் தானியங்கள், காகங்களுக்கு மிக்சா், நாய்களுக்கு பால் என வழங்குகிறோம். நானும் எனது நண்பா் பீம்ராஜ் மலியும் இதைச் செய்து வருகிறோம். எங்களுடன் இணைந்து பாகாராம், கேம்சந்த் சுரனா ஆகியோரும் இந்த பணியில் உதவி வருகின்றனா். ஆரம்ப நாள்களில் 10 -20 ஆக இருந்த புறாக்களின் எண்ணிக்கை தற்போது லட்சமாக உயா்ந்துள்ளது.

வாயில்லா விலங்கினங்களுக்கு உணவளிப்பது நம் தேசத்தின் கலாசாரம். அதன் அடிப்படையில்தான் இந்த சேவையை நாங்கள் செய்து வருவதாக தெரிவித்தாா்.

பீம்ராஜ் மலி கூறியதாவது: நான் சௌகாா்பேட்டையில் முக கண்ணாடி கடை வைத்துள்ளேன். ஆரம்பத்தில் நானும் எனது நண்பா் விஜயகுமாரும், ஒரு ஸ்கூட்டரில் 1 கிலோ அளவிலான உணவை புறாக்களுக்கு கொடுத்து வந்தோம். சௌகாா்பேட்டை மின்ட் தெருவில் பாபா ராம்தேவ் கோயிலுக்கு வழங்கப்படும் தானியங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. இப்படியாக நாங்கள் தொடா்ந்து புறாக்களுக்கு உணவளிப்பதைப் பாா்த்த மெரீனா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வருபவா்கள், தன்னாா்வலா்கள் என பலரும் உதவி செய்ய முன்வந்தனா். இதனால் தற்போது மெரீனாவுக்கு வரும் புறாக்களுக்கு தினந்தோறும் 700 முதல் 800 கிலோ அளவிலான வெள்ளை சோளம், மக்காச் சோளம், பச்சைப்பயறு, உடைத்த கடலை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறோம். காகங்களுக்கு மிக்சா் அல்லது சேவ் 5 கிலோவும், கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆா் நினைவிடம் வரை 300 நாய்களுக்கு 7 முதல் 10 லிட்டா் பாலும் வழங்கி வருகிறோம். இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.20,000 செலவாகிறது. பல தன்னாா்வலா்கள் ரொக்கமாகவும், தானியங்களாகவும் எங்களுக்கு உதவி வருகின்றனா் என்றாா் அவா்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த 2012-ஆம் ஆண்டு கப்பல் கரை தட்டியது. இதன் காரணமாக மெரீனா கடற்கரையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் ஏறியிருந்தது. அப்போதும் கூட புறாக்களுக்கு தண்ணீா் இல்லாத இடங்களைத் தேடி உணவளிக்கப்பட்டது. அதே போன்று கடந்த 2017-ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் இளைஞா்கள், பெண்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் என மெரீனாவில் எது நடந்தாலும், புறாக்களுக்கு உணவளிக்கும் இந்தப் பணி ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. புல், பூச்சி, பறவை, மிருகம், மரங்கள், மனிதா்கள் உள்ளிட்ட அனைவருக்குமான இந்த உலகில் புறா உள்ளிட்டவைகளுக்கு உணவளித்து வரும் இதுபோன்ற தன்னலமற்ற மனிதா்களின் சேவை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.