அவசரமாக ரயிலில் பயணிக்க வேண்டியவர்கள், முன்பதிவு செய்யாவிட்டாலும், முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வசதியை உள்ளது. அதுதான் டி-ரிசர்வ்டு டிக்கெட்.
வட மாநில தொழிலாளர்களால், முன்பதிவு செய்த பெட்டியிலேயே, தங்களது இருக்கையில் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை என்று அண்மைக் காலமாக ரயில் பயணிகள் புலம்பி வரும் நிலையில், முன்பதிவு செய்யாமலேயே, முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வசதியை அளிக்கும் டி-ரிசர்வ்டு டிக்கெட் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
இது மிகவும் பழைய வசதிதான் என்றாலும், இது பற்றி பயணிகள் பலருக்கும் தெரியாமல் இருப்பதால்தான், இது பற்றி தற்போது விளக்கங்கள் வெளியாகி வருகிறது.
முன்பதிவு செய்யாமல், முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணிக்கும் வசதியை இந்த டி-ரிசர்வ்டு டிக்கெட் வழங்குகிறது.
இந்த டி-ரிசர்வ்டு டிக்கெட் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவில்லா மற்றும் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க முடியும்.
இந்த டி-ரிசர்வ்டு டிக்கெட்டை, ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமே எடுக்க முடியும்.
இந்த சேவையை முன்பதிவு செய்ய முடியாது. முன்கூட்டியே பெறவும் முடியாது.
நாம் டிக்கெட் கேட்கும் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே இந்த டிக்கெட்டை எடுக்க முடியும்.
டிக்கெட் கவுண்டர்களில் டி-ரிசர்வ்டு டிக்கெட் என கேட்க வேண்டும்.
நாம் கேட்கும் ரயிலில் டி-ரிசர்வ்டு படுக்கை அல்லது இருக்கை காலியாக இல்லை எனில் வழங்கப்படாது.
இந்த ரயில் டிக்கெட், ரயிலில் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது.
அதிகபட்சம் 100 கிலோ மீட்டருக்குள்தான் இந்த டிக்கெட் மூலம் பயணிக்க முடியும்.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 35 ரயில்களில் டி-ரிசர்வ்டு படுக்கை வசதி பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த வசதியை மேலும் விரிவுபடுத்தவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த வசதி எப்படி செயல்படுத்தப்படுகிறது?
உதாரணமாக கொல்லம் விரைவு ரயிலை எடுத்துக் கொள்வோம். இந்த ரயிலில் நெல்லை - சென்னை பயணிக்க ஒரு படுக்கை வசதி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது நெல்லை - கொல்லம் வரை அந்த இடம் காலியாகவே இருக்கும். எனவே, இந்த காலியாக இருக்கும் படுக்கை வசதியை நெல்லை - கொல்லம் செல்லும் பயணி பயன்படுத்த அனுமதி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டிருப்பதே இந்த டி-ரிசர்வ்டு டிக்கெட்.
ஒருவர், முன்பதிவில்லா பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுக்கும்முன்பு, அதே ரயிலில் டி-ரிசர்வ்டு இருக்கை காலியாக இருக்கிறதா என்பதை கேட்டுக் கொள்ள வேண்டும். இருந்தால், சற்று அதிகக் கட்டணம் செலுத்தி அந்த டிக்கெட் எடுத்து கூட்டம் இல்லாமல் பயணம் செய்யலாம். இல்லை என்றால் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.