அண்ணாவுக்குப் பின் விஜய்! முன்னாள் முதல்வரைச் சந்தித்த இந்நாள் முதல்வர்!
59 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வரை இந்நாள் முதல்வர் சென்று சந்தித்திருப்பது பற்றி...
தமிழ்நாட்டின் வரலாற்றில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முதலாக இப்போதுதான், தேர்தலில் வென்று முதல்வராகப் பதவியேற்ற ஒருவர், பதவியிழந்த முன்னாள் முதல்வரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.
1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா என்றழைக்கப் பெறும் சி.என். அண்ணாதுரை முதல்வராக மார்ச் மாதம் 6 ஆம் நாள் பதவியேற்றார்.
அந்தக் காலத்தில் புதிய முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து, அனைவருக்கும் மாநில ஆளுநர் விருந்தளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. புதிய அமைச்சரவை பதவியேற்ற மார்ச் 6 ஆம் தேதியே ஆளுநராக இருந்த சர்தார் உஜ்ஜல்சிங் அழைப்பின்பேரில் ஆளுநர் மாளிகையில் – அன்றைய ராஜபவனத்தில் - இந்த விருந்து நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த விருந்தில் முதல்வர் அண்ணா, அமைச்சர்கள் இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன், மாதவன், சத்தியவாணி முத்து, கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோற்றபோதிலும் ஆளுநர் அளித்த இந்த விருந்தில் பதவியிலிருந்து விலகிய முதல்வர் எம். பக்தவத்சலமும் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர். வெங்கடராமன், மஜீத், ஜோதி வெங்கடாசலம், மன்றாடியார், முன்னாள் பேரவைத் தலைவர் செல்லபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும், மாநகர மேயர் சம்பந்தம், ஷெரீப் மருதப் பிள்ளை, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அனந்தநாராயணன், தலைமைச் செயலர் சி.ஏ. ராமகிருஷ்ணன், அட்வகேட் ஜெனரல் மோகன் குமாரமங்கலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில் அந்நாள் முதல்வர் அண்ணாவும் முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்ததுடன், இருவரும் இணைந்து விருந்துண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பின்னரும், எம். பக்தவத்சலத்தையும் காமராஜரையும் அண்ணா நேரில் சென்று சந்தித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இடையே அண்ணா மறைந்துவிட முதல்வராக கருணாநிதி பதவியேற்றார். தொடர்ந்து, நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977-ல் நடந்த பேரவைத் தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் வி.என். ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின்... எந்த முதல்வரும் உடனடி முன்னாள் முதல்வரைச் சென்று சந்தித்ததில்லை.
வரலாற்றில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை இந்நாள் முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார்!
இந்தச் சந்திப்பு பற்றித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிந்துள்ள முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Vijay after Anna! Todays Chief Minister who met the former Chief Minister...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.