பெங்களூரு
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்