முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்கப் போறீங்களா? அப்போ வீட்டை இன்ஸூர் பண்ணவும் மறந்துடாதீங்க!

வாடிக்கையாளர்களாகிய நாம், எந்தவொரு கடனையும் வாங்கும் போது, கடன் தொகைக்கு காப்பீடு செய்தால், நமது வாழ்க்கைக்கு நல்லது.

Updated On : 6 மார்ச், 2017 at 10:55 AM
பகிர்:

இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக் கடன் கொடுக்கும் கம்பெனியின் அம்பத்தூர் கிளை மேலாளரைச் சந்திப்பதற்காக அம்பத்தூர் சென்றேன். மேலாளர், அதே கம்பெனியின் வட இந்திய கிளைகளில் அதிக வருடங்கள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். வட இந்திய வாடிக்கையாளர்கள், வீட்டின் மதிப்பில் 60% சதவீதம் முதல் 70% சதவீதம்தான் கடன் வாங்குவார்கள் என்ற தகவலை பேச்சு வாக்கில் சொன்னார்.

பேசிக்கொண்டிருக்கும் போது, அப்படியே வீட்டுக் காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் சொல்ல ஆரம்பித்தார்.  அவருடைய வாடிக்கையாளர் ஒருவர், அயல்நாட்டில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மாதச்சம்பளம் 1.5 லட்சம். அவருக்கு 10 வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள். அவர் வைத்திருந்த சேமிப்பையும், ரூ.40 லட்சம் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கியுள்ளார். சிறப்பான முறையில் கிரஹப்பிரவேஷம் செய்து அந்த வீட்டில் 2 மாதங்கள் இருந்துள்ளார். வாங்கிய கடனுக்கு எந்தவிதமான காப்பீடும் செய்யவில்லை. சரியாக 6 மாதத் தவணை முடிந்த நிலையில் அந்த வாடிக்கையாளர் திடீரென்று இறந்து விட்டார்.

அதன் பிறகு இறந்த வாடிக்கையாளரின் மனைவியால் மாதத் தவணையை கட்ட முடியவில்லை. எனவே இப்போது, கடன் கொடுத்த கம்பெனி, அந்த வீட்டை விற்று, கம்பெனிக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கொள்ளும் நிலை. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், கம்பெனிக்கு சேர வேண்டிய தொகையைக் காட்டிலும் அதிக விலைக்கு வீட்டை விற்றிருந்தால், கம்பெனிக்கு சேர வேண்டிய தொகை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை இறந்தவரின் வாரிசுதாரரிடம் கொடுப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இந்த மாதிரி நடப்பதில்லை.  வீடு விற்று கம்பெனி அல்லது வங்கி எடுத்துக்கொண்டது போக மேலும் ஒரு சில லட்சங்கள் வாடிக்கையாளர் கொடுத்து கணக்கை முடிக்க வேண்டிய சூழ்நிலைதான் தற்போது உள்ளது. கட்ட முடியாத இறந்தவரின் வாரிசு தாரர்கள் கம்பெனி அல்லது வங்கி தொடுக்கும் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. 

Advertisement

இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன வியாதி வருகிறது என்றே தெரியவில்லை. எனவே வாடிக்கையாளர்களாகிய நாம், எந்தவொரு கடனையும் வாங்கும் போது, கடன் தொகைக்கு காப்பீடு செய்தால், நமது வாழ்க்கைக்கு நல்லது. ஒருவேளை கடன் தொகையை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென்று இறந்துவிட்டால், காப்பீட்டுக் கம்பெனி, நாம் கடன் வாங்கிய வங்கிக்கோ அல்லது கம்பெனிக்கோ கடன் தொகையை செலுத்தி விட்டு வங்கியில் அடமானமாக இருக்கும் வீட்டுப் பத்திரங்களை இறந்தவரின் வாரிசுதாரரிடம் வங்கி ஒப்படைக்கும் என்று காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலாளர் சொல்லி முடிக்க அவருடைய டேபிளில், 3 பேருக்கு சூடான டீயைக் கொண்டு வைத்தார் அவருடைய பணியாள். 

இதற்கிடையில் என்னுடைய காப்பீட்டு முகவரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் கடன் வாங்கிய தொகைக்கு காப்பீடு செய்ய வேண்டும். எனவே, விண்ணப்பத்தோடு நாளை வீட்டிற்கு வந்து கையெழுத்து மற்றும் காப்பீடு தொகைக்கான காசோலையை பெற்று செல்லுமாறு கூறினேன்.  

எனவே கடன் வாங்கும் போது கடன் தொகைக்கு நிகரான காப்பீடை உடனே பெறுவீர். வாழும் காலம் வசந்தமாக இருக்கும்.

Image Courtsy: Livemint.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.