'கிம் உயிருடன் இருக்கிறார்; ஆனால், நிற்கவோ, நடக்கவோ முடியாது'
வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது...
வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது என்றும் வட கொரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் உயர் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட கொரிய தூதரகப் பணியிலிருந்தும் அந்த நாட்டை விட்டும் வெளியேறிய தே யோங் ஹோ, தற்போது தென் கொரியாவில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கிம் பங்கேற்காத நிலையில், இதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும் கோமா நிலையில் இருக்கிறார் என்றும் ஏராளமான உறுதியற்ற செய்திகள் பரவி வருகின்றன.
ஏப். 15 ஆம் தேதி நடைபெற்ற வட கொரிய நிறுவனரும் கிம்மின் தாத்தாவுடமான கிம் இல் சுங் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காததிலிருந்து கிம்மிற்கு உடல் நலமில்லை அல்லது காயம்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி என்று தே யோங் ஹோ குறிப்பிட்டுள்ளார்.
சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், அவருக்கு உண்மையிலேயே ஏதாவது அறுவைச் சிகிச்சையோ வேறு ஏதேனும் நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவு, அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக எவ்வித சான்றையும் அவர் அளிக்கவில்லை என்றபோதிலும், உடல் பருமன் பிரச்சினையால் கிம் ஜோங் உன் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.