திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள கணபதிபாளையம் செட்டிக்காடு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (55) என்பவரது தோட்டத்தில் சினை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தத போது, மாடு எதிர்பாராத விதமாக அங்குள்ள தரைமட்டக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.. இச்சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மாட்டின் எடை அதிகமாக இருந்ததால் கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் மூலமாக கயிறு கட்டி கிணற்றில் இருந்து பசுமாட்டை 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்டனர்.