முகப்பு
தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே கல் குவாரி வெடியில் சிறுமி பலி

நாமக்கல் அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடியால் புதன்கிழமை மாலை 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடியால் புதன்கிழமை மாலை 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்த கௌசிக் பிரபு என்பவருக்கு சொந்தமான கல் குவாரி, கொண்டமநாயக்கன்பட்டியில் இருக்கிறது.

இங்கு வையப்பமலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது மனைவி, மகன், மகளுடன் குடிசை வீட்டில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் மூர்த்தி தனது மனைவியுடன் பொருள்கள் வாங்க வெளியே சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவரது மகள் நந்தினி (10), மகன் சௌந்தரராஜன் (5) இருவரும் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டது.

இந்த வெடி வெடித்ததில் பெரிய பாறை ஒன்று பறந்து வந்து விளையாடிக்கொண்டிருந்த இருவர் மீதும் விழுந்தது. இதில் சிறுமி நந்தினி தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் சௌந்தரராஜன் கை,  கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகி, காவல் ஆய்வாளர் சுபாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் விரைந்து வந்தனர்.

இதில் காயமடைந்த சௌந்தரராஜனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சேந்தமங்கலம் காவல்துறையினர், கல் குவாரி உரிமையாளர் கௌசிக் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி வெடி விபத்தில் சிறுமி உயிரிழந்தது இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.